Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 472 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
472பெரியாழ்வார் திருமொழி || (5-4 சென்னியோங்கு) - கீழ்ப்பாட்டில் எம்பெருமான் திருப்பாற்கடல் முதலிய திவ்ய ஸ்தாநங்களை மறந்துவிட்டுத் தம்மிடம் போந்தபடியைப் பேசியருளினார்; ஒரு பொருளை மறதியினால் விட்டவர்கள் மீண்டு ஒருநாள் அப்பொருள் நினைவுக்கு வரும்போது அதனை அங்கீகரிப்பதுபோல, எம்பெருமானும் இப்போது திருப்பாற்கடல் முதலிய விடங்களை மறந்துவிட்டானேலும், பின்பொருகால் அவை நினைவுக்குவரின், அவற்றை அங்கீகரித்தருள வானன்றோ? என்று சிலர் சங்கிப்பதாகக் கொண்டு, அச்சங்கைக்குப் பரிஹாரம் பிறக்குமாறு இப்பாட்டை, அருளிச் செய்கின்றாமென்க. ‘இடவகைகள் இகழ்ந்திட்டு’ என்றதில் நோக்கு. ஒருவன் தன் மனைவியை மறந்து மற்றொருத்தியை காதலித்தானாகில், பின்பு ஒரு காலத்தில் மனைவியை ஸ்மரித்து, அவளோடு புணரக் கருதக்கூடும். அவன்றானே அவளிடத்துச் சில குற்றங்குறை காரணமாக அவளை இகழ்ந்து விட்டானாகில், மீண்டு ஒருகாலும் அவளை நெஞ்சிலும் நினையான்; அதுபோல, எம் பெருமான், திருப்பாற்கடல், பரமபதம், ஸ்ரீத்வாரகாபுரி முதலிய இடங்களைத் தானே புத்தி பூர்வமாக இகழ்ந்துவிட்டு வந்தனானாதலால், இனி அவ்விடங்களை ஒருகாலும் நினைக்கவும் மாட்டான் என்பது திருவுள்ளக் கருத்து. பெரியதொரு மலையின் கொடுமுடியில் நிர்மலமாக விளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண எளிதாயிருக்குமாறுபோல, என்னுடைய ஹ்ருதய கமலத்தினுள்ளே ஸுஸ்பஷ்டமாகப் பளபளவென்று விளங்காநின்ற தேஜஸ் ஸ்வரூபியே! என்று எம்பெருமானை விளிக்கின்றார். முன்னடிகளில். மிளிர்ந்த மின்னும்- மீமிசைச்சொல். தவளம்-வடசொல் திரிபு. இரண்டாமடியில், சுடர், ஒளி, சோதி என்ற இம்மூன்று சொற்களுக்கும், முறையே, திவ்யாத்ம ஸ்வரூபம், திவ்ய மங்கள விக்ரஹம், திவ்ய கல்யாண குணம் எனப் பொருள் வாசி காண்க. மூன்றாமடியில், வடதடமென்பதை, வட மென்னும் வட சொல்லின் விகாரமாகக் கொண்டு, ஆலிலை என்று பொருள் கூறுவாருமுளர்; இகழ்ந்திடுதல்- வெறுப்புக் கொள்ளுதல் என்பால் = பால்- எழலுருபு, இடவகை- இடம். “கொண்டனையே” என்றதற்குப் பின், இப்படியுமொரு ஸௌசீல்யமிருப்பதே! இப்படியுமொரு ஸௌலப்பமிருப்பதே! இப்படியுமொரு வாத்ஸல்யமிருப்பதே! எனக் கூட்டி உயர்யஸிக்க. “உனக்குரிதத்தாக்கினையே” என்பாலிடவகை கொண்டனையே’ என்று- ‘இப்படி செய்தாயே! என்று அவன் திருவடிகளிலே விழுந்து கூப்பிட இவரை யெடுத்து மடியிலே வைத்துத் தானும் ஆச்வஸ்தனான படியைக் கண்டு ப்ரீதராய்த் தலைக்கட்டுகிறார். “அதனிற் பெரிய என் அவா ” என்று நம்மாழ்வாருக்குப் பகவத் விஷயத்திற் பிறந்த அபிநிவேசமெல்லாம், இப் பெரியாழ்வார் பக்கவில் ஈச்வரனுக்குப் பிறந்தபடி இத் திருமொழி” என்ற ஆன்றோர் உரையில் அருளிச் செயல் இங்கு அறியற்பாலது. 10
தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10
தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல
சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும்
மதிள், Madhil - மதில்களை யுடைய
துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு
என் பால், En paal - என்னிடத்தில்
இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)